இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும்.
இப்பாலம் உட்பட இந்திய விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொகையை இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இப்பாலம் இந்திய இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளால் இணைந்து நுவரெலியா பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக படகுகள், சீனி மற்றும் மின்பிறப்பாக்கிகள் தொகையொன்றும் இந்திய உதவிகளில் அடங்குகின்றன.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் குழுவொன்று மற்றும் இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமூகமளித்திருந்தனர்.


