TamilsGuide

ஹசீனாவுக்கு 5, சகோதரிக்கு 7, மருமகளுக்கு 2 ஆண்டு சிறை - வளைத்து வளைத்து தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அதே வழக்கில், ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 14 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மொத்தம் 17 குற்றவாளிகளுக்கு தலா ஒரு லட்சம் வங்கதேச டாக்கா அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், நவம்பர் 27 ஆம் தேதி, இதேபோன்ற ஊழல் குற்றச்சாட்டில் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மற்றொரு வங்கதேச நீதிமன்றம்.

அதற்கும் முன்னதாக கலவரத்தின் போது மனிதகுலத்திற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து நூற்றுக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்திய வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலமாகி உள்ள நிலையில் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. 
 

Leave a comment

Comment