TamilsGuide

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு , பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காணொளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார்.

அதேவேளை வீட்டின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும் , அதன் போது சிலர் வெள்ளத்தில் விழுந்த நிலையில் , அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment