வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் இந்நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பேருந்து கட்டணத்தை செலுத்திய பின்னர், நடத்துனர்கள் மீதிப் பணத்தை வழங்காமை பயணிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் இதற்குத் தீர்வாகவே வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது எனவும் இதன்மூலம் பேருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் இவ்வாறான காரணங்களால் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித்தருமாறு மக்களிடமிருந்து அதிகளவான கோரிக்கைகள் வந்தன எனவும் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பாரிய பின்னடைவில் உள்ளது எனவும் எனவே அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது எனவும்
எந்தவொரு வங்கி அட்டையின் மூலம் பேருந்துகளுக்கான பயண கட்டணங்களை செலுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


