TamilsGuide

கமல் தயாரிப்பில் நடிக்க ஓர் அரிய வாய்ப்பு...- யாரும் நம்ப வேண்டாம் என ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

சமீப காலமாக பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் பெயரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது நடிப்பில் ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடி நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் பெயரில் போலியாக வெளியிடப்படும் அறிவிப்பு மற்றும் அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அதேபோல், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவண்டாம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment