திரைப்பட நடிகர், செய்தி வாசிப்பாளர் திரு. பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் 104 ஆவது பிறந்தநாள் இன்று
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள முன்னீர்பள்ளம் என்கிற கிராமத்தில் பிறந்தவர். இந்த ஊரில் ‘பரிபூரண கிருபேஸ்வர’ராக கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் பெயரை ஆண் பிள்ளைகளுக்குச் சூட்டுவது இன்றும் வழக்கமாகத் தொடர்கிறது. அப்படித்தான் பூர்ணம் விஸ்வநாதனின் அப்பாவுக்கும் பூர்ண கிருபேஸ்வரன் என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டது. தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்தவர்களில் ஒருவரான மு.சி. பூரணலிங்கம் பிள்ளை (1866 - 1947) பிறந்து வளர்ந்ததும் இந்த ஊரில்தான்.
பள்ளிக் கல்வியின் ஒருபகுதியை தென்காசியிலும் பின்னர் புதுக்கோட்டையில் சித்தப்பாவின் வீட்டில் தங்கி, இண்டர்மீடியேட் கல்வியையும் பயின்றவர். புதுக்கோட்டையில் படித்தபோது பள்ளி நாடகத்தில் பூர்ணம் விஸ்வநாதன் ஏற்ற முதல் வேடம் ராமானுஜர். இவருடைய மூத்த அண்ணன் பூர்ணம் ராமச்சந்திரன் (எழுத்தாளர் உமா சந்திரன்) அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அண்ணன் காட்டிய வழியில், தன்னுடைய 24-வது வயதில் அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையத்தில், செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து விஸ்வநாதனின் இரு தங்கைகளில் ஒருவரான லட்சுமி பூர்ணம் அங்கே நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியில் சேர்ந்தார். காந்தி தங்கியிருந்த இடத்தைக் கடந்தே தினசரி வானொலி நிலையத்துக்குச் சென்று வந்த விஸ்வநாதன், காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் பலமுறைக் கலந்துகொண்டு அவரது அறிவுரைகளால் தாக்கம் பெற்றிருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில், டெல்லியிலிருந்து ஒலிப்பரப்பாகி வந்த அதிகாலை 5.30 மணி தமிழ்ச் செய்தியில் ‘ஆல் இண்டியா ரேடியோ...செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது!’ என்று தேச வரலாற்றின் முக்கியத் திருப்பத்தைச் செய்தியாக ஆனந்தக் கண்ணீர் பனிக்க வாசித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். பின்னர் இந்திய சுதந்திரத்தின் பொன் விழாவைக் கொண்டாடியபோது, பூர்ணம் விஸ்வநாதனுக்கு இதற்காக கௌரவம் செய்து விழா எடுத்தது சென்னை வானொலி நிலையம். செய்தி வாசிப்பாளராகவும் வானொலி நாடகங்களில் நடித்ததன் மூலமும் பூர்ணம் விஸ்வநாதனின் குரல், தெற்காசியா முழுவதும் வாழும் தமிழர்களிடம் பிரபலமடைந்திருந்தது.
டெல்லியில் செய்திப் பணியுடன் ‘சௌத் இண்டியா கிளப்’ நடத்தி வந்த நாடகக் குழுவிலும் இணைந்து பல நாடகங்களில் நடித்து மேடையிலும் புகழ்பெற்றார். டெல்லியில் 20 வருட வாழ்க்கை ஓடிப்போயிருந்தது. அப்போது நாடக விழா ஒன்றுக்காக டெல்லிக்கு வந்திருந்த எழுத்தாளர் சுஜாதாவை, பூர்ணம் விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நாடகக் கலைஞர் பாரதி மணி. அப்போது, ‘ஒரு கொலை.. ஒரு பிரயாணம்’ என்கிற தன்னுடைய நாடகத்தை பூர்ணம் விஸ்வநாதனிடம் கொடுத்து, ‘இதைப் படித்துப் பார்த்து.. உங்களுக்குப் பிடித்தால் அரங்கேற்றம் செய்யுங்கள். உங்களைப் போன்ற ஒருவர் டெல்லியில் இருந்துகொண்டு என்ன செய்கிறீர்கள்..? நீங்கள் இருக்க வேண்டியது சென்னையில் அல்லவா?’ என்று கேட்டார் சுஜாதா.
அவர் கொடுத்த நாடகத்தைப் படித்து வியந்த விஸ்வநாதன், இது சபா நாடகங்களின் போக்கையே திசை திருப்பிவிடும் என்று நினைத்தார். அந்த வருடமே பணி மாறுதல் வாங்கிக்கொண்டு 1965-ல்சென்னையில் குடியேறினார். சென்னையில் ஏற்கெனவே பழக்கமாகி யிருந்த திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் (பின்னர் கலா நிலையம் என ஆனது) குழுவினருடன் தன்னை இணைத்துகொண்ட விஸ்வநாதன், ‘ஒரு கொலை.. ஒரு பிரயாணம்’ நாடகத்தைச் சென்னையில் அரங்கேற்றுவதில் பெரும்பங்கு வகித்தார்.
‘நாடகம் என்பது நடிகனின் கலை’ என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தன்னுடைய நாடகத்துக்கு பூர்ணம் விஸ்வநாதன் உயிர்கொடுத்தைக் கண்டு வியந்தார் சுஜாதா. அடுத்து ‘அடிமைகள்’ என்கிற நாடகத்தை அவருக்கு எழுதிக்கொடுத்தார். அதுவும் வெற்றிபெற, பின்னர், சென்னையில் ’ பூர்ணம் நியூ தியேட்டர்’ என்கிற குழுவைத் தொடங்கிய விஸ்வநாதன், சுஜாதாவின் ‘அடிமைகள்’ நாடகத்தை அரங்கேற்றினார். அதன்பின்னர், ‘கடவுள் வந்திருந்தார்’, ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, ‘ஊஞ்சல்’, தொடங்கி பத்துக்கும் அதிகமான நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனுக்காக சுஜாதா எழுத அவை வெற்றி நாடகங்களாகின.
இவற்றில் பல நாடகங்களை தினசரி 3 காட்சிகள் நடத்தினார் விஸ்வநாதன். ‘ஊஞ்சல்’ நாடகத்தில் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பைப் பார்த்து அரங்கமே அழுத காலம் ஒன்று உண்டு. உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்தும் கலை நாடகம் என்கிற புரிதல் விஸ்வநாதனிடம் இருந்தது. குரலும் பாவனையும் இணையும்போது பூர்ணம் விஸ்வநாதனின் அரங்க நடிப்பில் வெளிப்பட்ட நுண்ணிய நளினங்களை நினைவுகூர இன்றைக்கும் அவருடைய ஆயிரக்கணக்கான நாடக ரசிகர்கள் இந்திய நகரங்களில் இருக்கிறார்கள்.
நாடக உலகில் செய்த சாதனைகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் திரையுலகில் தனித் தடம் பதித்தார். இன்று பூர்ணம் உருவாக்கிய குழுவை, அவரால் சிறந்த நாடகக் கலைஞர்களாக உருவாக்கப்பட்ட அவருடைய மாணவர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள். சலனமற்ற நிர்மலமான மனதைக் கொண்டவர்கள், ஒரு கட்டத்துக்குப் பிறகு வயதே ஆகாமல் அப்படியே ஒரே தோற்றத்தில் நிலைபெற்று விடுவார்கள். பூர்ணம் விஸ்வநாதனும் அப்படித்தான். அவருடைய கலையுலக வெற்றியில் பின்னிருந்து ஆதரவு தந்தவர் அவருடைய மனைவி சுசீலா. பூர்ணம் விஸ்வநாதன் சுசீலா தம்பதிக்கு. உமா மோகன், பத்மஜா ராமச்சந்திரன், சித்தார்த்தன் என மூன்று வாரிசுகள்.
இந்த பிறந்தநாளில் இந்த மாபெரும் நடிகரை நினைவு கூறுவோம் 🙏


