2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறுகிறது.
வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது வரவு செலவு திட்டம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் வரையில் வரவு செலவு திட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


