இந்தோனேசியாவில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம் அடைந்தனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரபல மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.
மதியம் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. இதன் பாதிப்பு மசூதியிலும் பள்ளியிலும் எதிரொலித்தது.
தகவலறிந்து போலீசார், மீட்புப்படையினர் உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
முதல்கட்ட விசாரணையில் பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகில் இருந்து தான் குண்டுகள் வெடித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து சில பொம்பை துப்பாக்கிகளை கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


