ஏழிசை மன்னரை சிறைக்கு அனுப்பிய இந்துநேசன் ! லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அப்போதைய சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். சி. என். லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தமிழகத்தைக் குலுக்கிய சில கொலை வழக்குகளில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கும் ஒன்று. காரணம் கொல்லப்பட்டவன் அல்ல, குற்றவாளியாகக் கூண்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்கள் தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம். அவர்கள்தான் புகழின் உச்சியில் இருந்த திரைப்பட நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர். 1944ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை 1947 வரை வழக்கு நடந்து முடிவும் வந்தது. இதன் விவரங்களைச் சிறிது இப்போது பார்ப்போம். அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று இந்துநேசன் எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன் லட்சுமி காந்தன். இந்த ஆளுக்கு அப்போதைய பிரபலமான மனிதர்களின் அந்தரங்கங்களைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, அல்லது செய்வதாக மிரட்டி பணம் பிடுங்குவது. இது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்தமையால் இந்த லட்சுமிகாந்தன் காட்டில் நல்ல மழை.
இந்த வழக்கில் நடந்த புலன் விசாரணையை அடுத்து ஐயத்திற்குட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் எஸ். எம். சிரீராமுலு நாயுடுவும் அடக்கம். வழக்கில் இயக்குனர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்கள் தியாகராஜ பாகவதரும் கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த அறமன்றத்திலும் இவர்களது மேல்முறையீடு தோல்வியடைந்தது. 1947 வரை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர்.
பிரைவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இச்சமயம் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆனார்கள். இதுவரை இக்குற்றத்தை இழைத்தவர்கள் யாரென்ற மர்மம் தீர்க்கப்படவில்லை.
சி.என். இலட்சுமிகாந்தன் 1940இல் சென்னையில் சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் காகித பற்றாக்குறையினால் அக்காலத்தில் புது பத்திரிக்கைகளை துவக்க அப்போதைய பிரித்தானிய அரசு அனுமதிக்கவில்லை. சினிமாதூது பத்திரிக்கை திரைப்பட பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அனுமதியில்லாமல் சினிமாதூது வெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அதை மூடும் படி செய்தனர்.
அடுத்து லட்சுமிகாந்தன், இந்து நேசன் எனும் ஏற்கனெவே விற்பனையாகிவந்த பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார்.
அதிலும் முக்கியமாக உண்மையோ பொய்யோ ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் அனைத்துக் கலைஞர்களும், இவரின் பத்திரிக்கைச் செய்திகளுக்கு இலக்கானார்கள். தனி நபர்களின் மீது அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் மஞ்சள் ஏடுகளின் முன்னோடியாக இந்துநேசன் விளங்கியது. அதனால் அவர் பல எதிரிகளை பெற்றார்.
Sukumar Shan


