பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார்.
பின்னர் கார்த்திகாவிடம் பேசிய அவர்," ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.


