சிவகுமாரின் 100-வது படமë "ரோசாப்பூ ரவிக்கைக்காரி.'' சிவகுமாரின் நண்பரான திருப்பூர் மணி இதைத் தயாரித்தார். சிவகுமாரின் ஜோடியாக தீபா நடித்தார்.
இளையராஜா இசை அமைக்க, தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தனர். இந்தப் படத்தில், கள்ளங்கபடமற்ற கிராமத்து இளைஞனாக சிவகுமார் நடித்தார். அவரை மணக்கும் தீபா, நாகரிகத்தில் நாட்டம் கொண்ட பெண். சந்தர்ப்ப சூழ்நிலையினால், வழி தவறிச் சென்று, கணவனுக்கு துரோகம் செய்கிறாள். மாறுபட்ட கதை அம்சம் கொண்ட இந்தப்படம், சிவகுமாரின் 100-வது படம் என்ற சிறப்புக்கு ஏற்ப வெற்றிப்படமாக அமைந்தது.
படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி சிவகுமார் கூறியதாவது:- "சிவாஜியின் நிழலையே பார்த்து, அதன் மூலம் நடிப்பைக் கற்றுக்கொண்ட எனக்கு, நிஜத்திடம் ஆசீர்வாதம் பெறத் தோன்றியது. 500 ரூபாய்க்கு மாலை வாங்கிக்கொண்டு, சிவாஜி வீட்டுக்கு சென்றேன்.
சாதாரணமாக நான் யார் காலிலும் விழுபவன் அல்ல. அன்று, என் நடிப்பின் குருநாதர் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அப்படியே அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். "எனக்கு எதுக்குடா மாலை? நான்தான் உனக்குப் போடணும்'' என்றார். "வரம் கேட்க வரும் பக்தன்தான் கடவுளுக்கு மாலை போடணும். நான் உங்களிடம் கேட்கும் வரம் ஆசீர்வாதம்'' என்றேன். உடனே சிவாஜி, "டேய், சிவா! உன்னை யாரும் வெறுக்கமுடியாதுடா... உனக்கு விரோதியே இருக்க மாட்டான்டா...! நல்லா இரு!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.
சிவகுமாரின் 100-வது படத்தின் 100-வது நாள் விழா, சிவாஜிகணேசன் தலைமையில் நடந்தது. இதே காலக்கட்டத்தில் சிவகுமாரும், ஷோபாவும் ஜோடியாக நடித்த "ஏணிப்படிகள்'' வெளிவந்தது. இந்தத் தரமான படம், வசூலிலும் வெற்றி பெற்றது.
பதிவு-பிரசாந்த்!


