சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே யார் எல்லாம் வரப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் சின்னத்திரை நட்சத்திர ஜோடி பிரஜன்-சான்ட்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதாக தகவல் வெளியானது. இதற்கு முன்னர் 2வது சீசனில் தாடி பாலாஜி மற்றும் நித்யா ஜோடியாக பிக் பாஸில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை திவ்யா கணேஷ் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் அவர் சன் டிவியின் அன்னம் சீரியலில் இருந்து திடீரென விலகியதாக கூறப்படுகிறது. இதனால் திவ்யா கணேஷின் என்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும், குக் வித் கோமாளி புகழ் ஷபானாவும் சின்னத்திரை நடிகை ஃபரினா ஆசாத்தும் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.


