TamilsGuide

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராகச் செயல்பட்ட போது சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 20 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று (22) அழைக்கப்பட்டது.

அதன்படி, குறித்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 20 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​இந்த வழக்கில் பிரதிவாதிக்கு வழங்க வேண்டிய அனைத்து ஆவணங்களும் தற்போது வழங்கப்பட்டுவிட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆசாத் நவாவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த ஆவணங்களை ஆராய வேண்டும் என பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, அதற்கான திகதியை வழங்குமாறு கோரினார்.

கடந்த 2010 மற்றும் 2015 க்கு இடையில் அரசாங்க அமைச்சராகப் பணியாற்றியபோது, ​​தனது சட்டப்பூர்வ வருமானத்தை விட சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சேகரித்ததன் ஊடாக இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
 

Leave a comment

Comment