TamilsGuide

தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில்..

தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில், தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.

சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.

உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந் தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை. பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இப்போதைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!
 

Leave a comment

Comment