நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறுகையில்," நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்" என்கிறார்.
படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகர் சசிகுமாருக்கும் படக்குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


