TamilsGuide

ஐ.நா. கூட்டத்துக்கு சென்றபோது நகரும் படிக்கட்டில் மனைவியுடன் சிக்கிய டிரம்ப்- விசாரணை நடத்த உத்தரவு

நியூயார்க்கில் நேற்று ஐ.நா. சபை பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சென்றார். அவர்கள் அங்குள்ள நகரும் படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) சென்றனர்.

அப்போது திடீரென நகரும் படிக்கட்டு பழுதானதால் அப்படியே நின்றது. மெலனியா ஹீல்ஸ் செருப்பு அணிந்து இருந்ததால் நிலை தடுமாறினார். பின்னர் இருவரும் நகரும் படிக்கட்டில் நடந்தே சென்றனர்.

இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதன் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

ஐ.நா.சபை ஊழியர்கள் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களை பணிநீக்கம் செய்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இது பற்றி டிரம்ப் கூறும் போது, மெலனியா சுதாரித்துக்கொண்டதால் கீழே விழவில்லை. நாங்கள் இப்போது பலமாக இருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஐ.நா.சபை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றிய போது அவர் முன்னால் வைக்கப்பட்டு இருந்த டெலி பிராம்ப்டர் செயல் இழந்தது. இருந்த போதிலும் அவர் தொடர்ந்து பேசினார். இதுவும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Leave a comment

Comment