நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இதன்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது மின்சாரத் துறையின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் புதிய மாற்றத்திற்கு ஒரு புதிய நிறுவனக் கட்டமைப்பு அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக பழைய கட்டமைப்பு இனிமேலும் போதுமானதாக இல்லை என்றும், புதிய கட்டமைப்பின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இக் கலந்துரையாடலில் மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மின் உற்பத்தி நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு விநியோக நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு இயக்க நிறுவனம் உட்பட புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


