நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இயக்குனர் செல்லா அய்யாவு இரங்கல் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," ஆறு மணி காமெடி ஹிட்டாக முக்கிய காரணம் ரோபோ சங்கர்தான்.. அது எடுக்கும்போது எங்களுக்கு தெரியாது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று.
நாள் முழுக்க ஒரே டோனில், ஒரே மீட்டரில் அட்சரம் பிசகாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
ரியாக்சன் மாறாமல் ஸ்பாட்டிலேயே எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அதுதான் தியேட்டரிலும் எதிரொளித்தது. ரசிகர்களின் சிரிப்பினில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். கண்ணீர் அஞ்சலி அண்ணா" என்றார்.
இயக்குனர் செல்லா அய்யாவு தற்போது, கட்டாகுஸ்தி 2 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


