நாட்டில் 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அனுராதபுரம்
விலச்சிய பகுதி மக்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கைக்காக போரடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் விலச்சிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில் ” ஒரே கையெழுத்து மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம்’ என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், ஒரு வருடம் கடந்தும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தயாராக இல்லை.எதிர்க்கட்சி இப்பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும்போது ஒலிவாங்கிகளை துண்டித்து அதைத் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் திறமையாக உள்ளது.
30 வருட விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகியும், விலச்சிய பகுதி மக்கள் இன்னும் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகின்றனர்.
யானை-மனித மோதல்கள், பயிர் சேதம், மற்றும் அறுவடைக்கு நிலையான விலை இன்மை போன்ற பன்முக நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். அறுவடைக்கு சரியான விலை கிடைக்காததால் அவை வீடுகளில் குவிந்து கிடக்கின்றன.
பயிர் சேதத்திற்கோ அல்லது உயிர் இழப்பிற்கோ இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் எந்தவிதமான நடைமுறை சாத்தியமான தீர்வுகளும் இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியாக விவசாயிகளுக்காக முடிந்தவரை குரல் கொடுக்கும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


