யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள தொல்பொருள் சின்னமான மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் (18) பார்வையிட்டார்.
தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பழமையான அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக வருகை தந்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதேவேளை, யமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும் அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்றையதினம் பெய்த கனமழையினால் இடிந்து விழுந்த மந்திரிமனையினை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர், யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல ஜீவ, புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன், நல்லூர் யாழ்ப்பாண வலயத்தின் உத்தியோகத்தர் மணிமாறன், கனியவள அளவையியலாளர் அமர்நாத், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் சென்றிருந்தனர்.


