TamilsGuide

கத்தார் மீது தாக்குதல்- அரபு நாடுகள் அவசர ஆலோசனை - இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்த போர் 2 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே கடந்த வாரம் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்தது.

அதன்படி நேற்று அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்தது.

இதில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்து உள்ளன.
 

Leave a comment

Comment