திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது. இதில் இளையாராஜா பேசியதாவது:
இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். இசை உலக சரித்திரத்தில் இது மிகப்பெரிய விஷயம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான்.
சிம்பொனி இசைக்கச் செல்வதற்கு முன்பு வீட்டுக்கே வந்து பாராட்டியவர் முதலமைச்சர். எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை.
நான் முதலாவது நன்றி தெரிவிக்க வேண்டியது எனது குழந்தைகளுக்குதான். எனது குழந்தைகளுக்காக நான் நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகளுக்காக செலவிடும் நேரம்தான் சிம்பொனியாக வந்துள்ளது.
சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என தெரிவித்தார்.


