TamilsGuide

கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.

இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், தனது சினிமா பயணம் அரை நூற்றாண்டை எட்டியுள்ளதை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும், வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூருக்கு வந்த இளையராஜா கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின், நகைகளை காணிக்கையாக செலுத்தினார். நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோவிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லூர் தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் இளையராஜா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment