TamilsGuide

ஐநா கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்துக்கு இந்தியா பதிலடி

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.

மேலும், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக சுவிட்சர்லாந்து, வெளிப்படையாக தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்திற்கு பொருந்தாத கதைகளால் சபையின் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தியாகி தெரிவித்தார். 
 

Leave a comment

Comment