இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ரஷிய அதிபர் புதினும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்கிறார் என்று டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இதுதொடர்பாக டிரம்ப், "நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் போது, தயவுசெய்து விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்" என்று கிண்டலாக பதிவிட்டார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின் போது சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தியதாகவும், ஜின்பிங் அரசாங்கம் அந்த தியாகங்களை மதிக்கிறதா என்றும் டிரம்ப் வினவினார்.
சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும், சீனா அவர்களின் தைரியத்தையும் தியாகங்களையும் நினைவில் கொள்ளும் என்று நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.


