இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்காக மொத்தம் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், 72 சோதனைகள் நடத்தப்பட்டன.
அவற்றில் 39 வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் ஆவர்.
அதன்படி, 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
நீதி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் மாவட்ட செயலகங்கள் உட்பட பல அரசு நிறுவனங்களிலிருந்தும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஆணையகம் மேலும் குறிப்பிட்டது.
மேலும், இந்தக் காலகட்டத்தில், இலஞ்சம் பெற்றதற்காக 27 நபர்கள் நீதிமன்றங்களால் தண்டனை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


