TamilsGuide

இலங்கை அகதிகள் கைது விவகாரம் - சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு வருகை தரும்போது, கைது செய்யப்படும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இயலுமை அரசாங்கத்திடம்
காணப்படுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையம் ஏன் இடைநிறுத்தியது என்பதை அரசாங்கத்தினால் அறிய முடிவில்லை என்றும் பிமல் ரத்நாயக்க நேற்று சபையில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து  பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் ” இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் நாம் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் ஏன் இடைநிறுத்தியது என்பதை எம்மால் அறியமுடியவில்லை.

கைது சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்துடன்; அமைச்சு மட்டத்தில் பேசுவோம். இவ்விடயம் குறித்து அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
இவ்வாறான கைதுகளை தடுக்க நீதியமைச்சுடன் கலந்துரையாடுவோம்.
தமிழர்கள் என்பதால் கைது செய்யப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராஜபக்ஷர்களின் ஒருசில அவதாரங்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது
யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாகச் செல்வதில்லை.

உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும். தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகாலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றளவில் தீர்க்கப்படவில்லை.

ஒரு இலச்சத்து 10 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதில் 28ஆயிரத்து 500 பேர் இலங்கை குடியுரிமையும், இந்திய குடியுரிமையும் இல்லாத நிலையில் இருந்தார்கள். இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் பங்குப்பற்றலுடன்
நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டு வந்தோம்.

ஒரு உறுப்பினரை தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் அந்த பிரேரணைக்கு ஆதரவளித்தார்கள். இதன் பின்னரே அந்த 28ஆயிரத்து 500 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்தியாவில் அகதிகளாக இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களை மீள்குடியமர்த்த தனிப்பட்ட முறையில் தலையீடு செய்துள்ளேன். கனகபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மீள்குடியேற்ற பணிகளை ஆராய்ந்துள்ளேன்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வதாக தற்போது குறிப்பிடப்படுகிறது.

சின்னையா சிவலோகநாதன் என்பவர் நாடு திரும்பிய போது அவர் யாழ்.பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவ்விடயத்தில் நான் தலையீடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுடன் சிவலோகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப்  பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கையல்ல,
அவ்வாறு கைது செய்வது தவறு. நாங்கள் நாட்டை நிர்வகிக்கிறோமே தவிர குடும்பத்தை நிர்வகிக்கவில்லை. அரச அதிகாரிகளில் ஒருசிலர் செய்யும் தவறுகளை அரசாங்கத்தின் தவறு என்று குறிப்பிடுவது முறையற்றது.

நாட்டுக்கு வரும் அகதிகள் இவ்வாறு கைது செய்யப்படுவது கவலைக்குரியது.
இருப்பினும் அதற்கு ஏதேனும் சட்ட காரணிகள் இருக்கும். இந்த சட்ட விடயங்களை திருத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது. தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் கடந்த காலங்களில் சட்ட திருத்தத்துக்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் கலந்துரையாடி இவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment