கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட 7700 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும்
1,20,640 ருபாய் பணத்துடனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற விசேட சோதனையின்போது கொழும்பில் இருந்து பேருந்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்த போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்து குறித்த வியாபரிகளிடம் வழங்கிய நிலையில் அதனை வாங்கி கொண்டு வரும்போது வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இதேவேளை, 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3200 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளும் 23 வயதுடைய ஒருவரிடம் 4500 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளும் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணமும் 2 கையடக்க தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


