சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவமும் கப்புறாளைகளினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெற்று வருகின்றது.
இலங்கையின் வரலாற்று பதிகளில் ஒன்றான மண்டூர் கந்தசுவாமி ஆலயம் கந்தபுராணத்து காலத்தில் உருவானதாக கருதப்படுகின்றது.
முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையில் உண்டான போரின்போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று, சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒரு வேல் கதிர்காமத்திலும், ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக புராணக் கதைகள் கூறுகின்றன.
இவ்வாறான பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


