உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப். முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார். தொடர்ந்து அமெரிக்கா வருகை தந்த 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஜெலன்ஸ்கி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கியும் விரும்புகிறார், புதினும் விரும்புகிறார். இந்த போரால் உலக நாடுகள் தளந்துவிட்டன. விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.
நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடுய அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன். இந்த போர் சற்று கடினமானது. இந்த போருக்கு ஜோ பைடன் தான் காரணம்.
பேச்சுவார்த்தையின்போது புதினுடன் போனில் பேசினேன். இதன் பின்னரும் பேச உள்ளேன். ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளேன்.
புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன்.பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம். உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு மேலும் உதவுகளை டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களிடம் ஜெலன்ஸ்கி கோரினார்.
முன்னதாக இந்த சந்திப்பின் முன், கிரீமியாவையும் நேட்டோ உறுப்பினராகும் ஆசையையும் உக்ரைன் கைவிட்டால் போர் நிற்கும் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


