TamilsGuide

தமிழர் பகுதியொன்றில் உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சனிக்கிழமை (16) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது பற்றி தெரியவருவதாவது;

குறித்த பொலிஸ் நிலையத்தின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் வவுச்சரை பெற்றுக் கொண்டு அதனை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வழங்கி அதற்கான எரிபொருள் வாகனங்களுக்கு நிரப்பி செல்வது வழமையானது.

இந்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பொலிஸ் ஜீப்வண்டிக்கும் பொலிஸ் நிலையத்திலுள்ள மின்சார உற்பத்தி செய்யும் இயந்திரமான ஜெனரேற்றருக்கும் டீசலுக்கான (வவுச்சர்) அனுமதி சீட்டை குறித்த சாரதி பெற்றுக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று அங்கு 12 ஆயிரத்து 400 ரூபாவுக்கு ஜீப்வண்டிக்கான டீசலை நிரப்பிக் கொண்டு ஜெனரேற்றருக்கான 6 ஆயிரத்து 600 ரூபா பெறுமதியான டீசலை பெற்றுக் கொள்ளாமல் அதற்கான பணத்தை எரிபொருள் நிலையத்தில் வாங்கி எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக புலனாய்வு பிரிவினர் பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் விசாரணை முன்னெடுத்து வந்த நிலையில் அரச பணத்தை மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து சம்பவதினமான சனிக்கிழமை (16) இந்த அரச பண மோசடி தொடர்பாக பொலிஸ் சாரதியாக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சாரதியை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (17) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Comment