TamilsGuide

போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் -அதிபர் புதின்

உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வந்து சேர்ந்தனர். அங்கு அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது.

இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிபர் புதின் கூறியதாவது:

எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான்.

டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.

அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.

உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு உடன்படுகிறேன்.

அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
 

Leave a comment

Comment