தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது.
இந்தத் தொகை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இரு மடங்காக, அதாவது ரூ.450 கோடியாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.


