TamilsGuide

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

பீடிக்கு அறவிடப்படும் புகையிலை வரியை 2  ரூபாயில் இருந்து 3 ரூபாயாக உயர்த்தும் நோக்கில் 2025 ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வரும் அதிவிசேட வர்த்தமானிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ சில்வா தலைமையில் ஜூலை 22 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது 1999 ஆம் ஆண்டின் புகையிலை வரிச்சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 1,140 பீடி உற்பத்தி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டும், வரி உயர்வுக்குப் பிறகு 840 மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எதிர்பார்த்த வருமானம் ரூ.2 பில்லியனாக இருந்தும், ரூ.1,055 மில்லியனே வசூலாகியதாகவும், இவ்வருடம் இதுவரை ரூ.469 மில்லியன் மட்டுமே வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத பீடி கடத்தலே வருமான குறைபாட்டுக்கு காரணம் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வரி உயர்வால் அனுமதிப்பத்திர புதுப்பிப்பு குறைவடைந்து, சட்டவிரோத சந்தை அதிகரித்ததா என குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

சட்டப்பூர்வ பீடி உற்பத்தியை ஊக்குவிக்க, வரி சீர்திருத்தங்கள் அறிவியல் ஆதாரத்தில் அமைய வேண்டும் என நிதிக்குழு தெரிவித்தது.

இந்தக் கூட்டத்தில் ரவி கருணாநாயக்க, சாணக்கியன் இராசமாணிக்கம், (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ் மற்றும் நிமல் பலிஹேன ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment