TamilsGuide

மன்னார் நகரசபை தவிசாளர் தெரிவின் பின்னர் இடம்பெற்ற வன்முறையால் பரபரப்பு

மன்னார் நகரசபைக்கு தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை நேற்று (24) மன்னார் நகரசபை பொது மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு நிறைவு பெற்ற வேளை  இரு நபர்கள் இணைந்து ஒருவரைத்  தாக்கியுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர்,  இரத்த காயங்களுடன் மன்னார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் மன்னார் நகரசபை முன்பகுதியில் நிறைந்திருந்த நிலையில் நபர் ஒருவரை அழைத்து இருவர் உரையாடி இருந்தனர்.

குறித்த உரையாடல் கைகலப்பாக மாறி இரு நபர்களும் இணைந்து மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த நபர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இருப்பினும் சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment