TamilsGuide

இஸ்ரேல் ராணுவத்திற்கு பயப்படவில்லை, இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்திற்கே பயப்படுகிறேன் - கிரேட்டா

காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

நேற்று, ஸ்டாக்ஹோமில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தில் பாலஸ்தீனக் கொடிகளுடன் அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இஸ்ரேலிய இராணுவத்திற்கு நான் பயப்படவில்லை; காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்து உலகம் தொடர்ந்து மௌனம் காப்பதைக் கண்டுதான் பயப்படுகிறேன்" என கிரேட்டா தெரிவித்தார்.

சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் தனது குழுவைக் கடத்திச் சென்றதாகவும், இஸ்ரேலிய ராணுவம் தங்களை அவமானப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

காசாவில் பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலை மீது உலகின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காசாவின் நிலை:

சர்வதேச அழுத்தத்தை மீறி, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. சமீபத்திய தாக்குதல்களில் உணவு விநியோக மையத்தில் காத்திருந்த 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மேற்கு காசாவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் அகதிகள் கூடாரம் தாக்கப்பட்டதில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 7, 2023 முதல் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 18 அன்று நடந்த போர்நிறுத்த மீறலுக்குப் பிறகு மட்டும் 4,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

Leave a comment

Comment