கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ் 175 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது.
இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும், பல தடவைகள் கிருமி நாசினி விசிறப்பட்டிருந்த போதிலும் உரிய விளைச்சலை பெற முடியாத நிலைதோன்றியுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நெற்செய்கள் அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கத்தினால் உரிய காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலை விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை என கவலை வெளியிடுகின்றனர்.
இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய முடியாத நிலையில் இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கமாவது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.


