TamilsGuide

இலஞ்சம் கோரிய இரு அதிகாரிகள் கைது

இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்காக இரண்டு பொது அதிகாரிகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தனித்தனி சம்பவங்களில் கைது செய்துள்ளது.

முதல் சம்பவத்தில் வெலிகந்தை பகுதியில் வசிக்கும் ஒருவரிடமிருந்து ரூ. 20,000 இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டுக்காக மகாவலி அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டார்.

அதுகல பகுதியில் ஏற்கனவே வீட்டுவசதி கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 20 பேர்ச் தொகுதிக்கான காணி அனுமதிப்பத்திரத்தை அங்கீகரிப்பதற்கும், வேறு ஒரு காணியை ஒதுக்குவதற்கும், குறித்த அதிகாரி இலஞ்சம் கோரியதாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், வவுனியாவில் உள்ள பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ரூ. 500,000 இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களின் முறைப்பாட்டுகளின் அடிப்படையில் இரண்டு கைதுகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் CIABOC உறுதிப்படுத்தியது.
 

Leave a comment

Comment