TamilsGuide

ஹரக் கடாவுக்கு எதிரான வழக்கு 15ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்று அழைக்கப்படும் “ஹரக் கடா” என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

அப்போது, முறைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா விடுப்பில் இருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை வேறு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு அவரது கனிஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

அதன்படி, வழக்கின் மேலதிக விசாரணையை ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நேற்று(19) நீதிமன்றத்தில் ஆஜரான இந்திராணி டயஸ் என்ற சாட்சியாளருக்கு அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

பிரதிவாதி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோதும், வெளியே கொண்டு செல்லப்பட்டபோதும், பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அவரை ஊடகங்களுடன் பேச முடியாதவாறு மறைத்து கொண்டு சென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது.

2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment