கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 210 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு பயணிகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வாகன உதிரி பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் வணிகர்களுக்காக நியமிக்கப்பட்ட “ரெட் சேனல்” வழியாக செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்களில் கொழும்பு, கிராண்ட்பாஸைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும், கண்டி, ரம்புக்வெல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் அடங்குவர்.
இருவரும் உள்ளூர் வணிகர்களின் சார்பாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் நேற்று (மே 15) காலை 8.30 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, பயணிகளின் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.7 கிலோகிராம் எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில், மீட்கப்பட்ட தங்கத்துடன் சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.


