நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார்,சூர்யா மற்றும் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, காஷ்மீர் பகல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களை போன்றது என பேசினார். இதற்கு தெலுங்கானா பழங்குடியின அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவரது பேச்சு பழங்குடியின மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது. அவர் பழங்குடியின மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.
மேலும் ஐதராபாத்தை சேர்ந்த லால் சவுகான் என்பவர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்.ஆர். நகர் போலீசில் புகார் செய்தார்.
இது சம்பந்தமாக கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


