TamilsGuide

போதைப்பொருள் வழக்கில் ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கைது

கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு ஒட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு சென்ற போது அங்கிருந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில் தவறாக அணுகிய தாக நடிகை வின்சி புகார் கொடுத்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.

இங்கு இன்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ கிராம் கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இயக்குநர்களுடன் இருந்த 3-வது நபர் ஷாகித் முகமது.இவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.

இது தொடர்பாக கலால் துறை அதிகாரி ஓருவர் கூறுகையில், கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனைக்கு சென்றோம். அங்கிருந்த 3 பேரிடம் இருந்து கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.

அவர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தொடர்ந்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இயக்குநர் காலித் ரகு மான், அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment