விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. வெளியிட்ட போஸ்டரில் விஜய் சேதுபதி கடும் கோபத்துடன் கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கி பின்னால் சீட்டுக்கட்டு இடம் பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.