TamilsGuide

சீன இறக்குமதி மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்வு - டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத வரி விதித்துள்ளார். அதேபோல், சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத வரிகளை மார்ச் மாத துவக்கத்தில் 20 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். அதன்பின், பரஸ்பர வரிவிதிப்பு என்ற வகையில் கடந்த வாரம் 34 சதவீத கூடுதல் வரியை விதித்தார். இதன்மூலம் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியானது 54 சதவீதமாக உயர்ந்தது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், சீன இறக்குமதிக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார். இதன்மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்தது. இந்த வரிவிதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால், உலக அளவில் பெரும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதையின்மையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவுக்கு விதிக்கப்படும் வரியை 125 சதவீதமாக உயர்த்துகிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

எதிர்காலத்தில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை க்கிழித்தெறியும் நாட்கள் இனி நிலையானவை அல்ல என்பதை சீனா உணரும் என்று நம்புகிறேன்.

75-க்கும் மேற்பட்ட நாடுகளில் விதிக்கப்பட்ட வரிவிதிப்புக்கு 90 நாள் இடைநிறுத்தத்தை நான் அங்கீகரித்துள்ளேன். இந்தக் காலகட்டத்தில் கணிசமாகக் குறைக்கப்பட்ட 10 சதவீத பரஸ்பர கட்டணமும் உடனடியாக அமலுக்கு வருகிறது என பதிவிட்டுள்ளார்.

இப்படி இரு நாடுகளும் வரி விதிப்பை தடாலடியாக உயர்த்தி வருவதால் வர்த்தக்ப் போர் தீவிரம் அடைந்துள்ளது.
 

Leave a comment

Comment