அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிற நாடுகளின் பொருட்கள் மீதான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்ததை அடுத்து ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளது.
ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 2.68% சரிவையும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.16% சரிவையும், சீனாவின் CSI 300 குறியீடு 0.48% சரிவையும், தென் கொரியாவில், கோஸ்பி குறியீடு 1.29% சரிவையும், ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 1.17% சரிவையும் சந்தித்தது.


