TamilsGuide

குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு

சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர்.

மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்று உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கினார். ஆனால் இது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது.

கோழிக்குஞ்சை விழுங்கிய பின்னர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை அம்பிகாபூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுத்திணறலால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து அதை மீட்டனர். அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைப்பேறுக்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Leave a comment

Comment