TamilsGuide

இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி அனைத்து விமானங்களையும் நிறுத்திய ஈரான்

பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 180 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவியது ஈரான். 1 வருட கால பொறுமைக்கு பின்னர் மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இஸ்ரேல் வெகுகாலம் நிலைக்காது, மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மதத்தவைவர் அயத்துல்லா காமினி கையில் ரைபிள் துப்பாக்கியுடன் பொதுவெளியில் தோன்றி பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் எண்ணெய்க் கிணறுகளையும், அணு சக்தித் தலங்களையும் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது என்றும் அதற்கான விலையை நிச்சயம் செலுத்தும் என்றும் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு மிரட்டல் விடுத்திருந்தார்.

அந்த வகையில் கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த போர் தீவிரமானதால் தங்களின் மீது அதீ நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஈரான் அச்சத்தில் உள்ளது.

எனவே நேற்றைய இரவு முழுவதும் ஈரானில் அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன. நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு 9 மணியில் இருந்து இன்று [திங்கள் கிழமை] காலை 6 மணி வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.

ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. இந்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் ஈரானில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா புலனாய்வுத் தலைமையகம் மீதும், காசா பகுதிகள் மீதும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் ஹைபா [HAIFA] நகர் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை வீசியுள்ளது. 
 

Leave a comment

Comment