TamilsGuide

ரஜினிகாந்த் சிகிச்சை பற்றி முன்கூட்டியே சொன்னார் - லோகேஷ் கனகராஜ்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

தற்போது உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், விமான நிலையம் வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

"மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்று 40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவரைப் பற்றி வலைதளங்கள் மற்றும் யூடியூபில் வெளியான தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தத் தகவல்கள் எங்களை மன ரீதியாக பாதிப்படைய செய்தன. இதைப் பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை."

"நிறைய பேர் தற்போது யூடியூப் மட்டுமே பார்க்கின்றனர். நாங்கள் படப்பிடிப்பில் இருந்ததால், எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எல்லோரும் அருகில் இருந்து பார்த்ததை போல் பேசுகின்றனர். எல்லோரும் ரஜினி சாரை கொண்டாடுகிறோம், அப்படி பார்த்துக் கொள்கிறோம். அவர் சொல்வதை போல் ஆண்டவன் அருளால் அவருக்கு எதுவும் ஆகாது. அக்டோபர் 15 ஆம் தேதி முதல் ரஜினிகாந்த் சார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்," என்று தெரிவித்தார்.
 

Leave a comment

Comment