TamilsGuide

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. எங்களின் குறைந்தபட்ச தண்டனை - ஈரான் உயர் தலைவர் கமேனி அதிரடி

பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஈரான் ஏவுகணை தாக்குத் நடத்தியது. இந்த திடீர் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்திய சில தினங்களில் ஈரானின் உயர் தலைவர் அலி கமேனி தெஹ்ரானில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் இஸ்ரேல் மீதான தாக்குதல் மிகவும் சரியான முடிவு என்று பேசினார்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பொது வெளியில் கமேனி உரையாற்றுவதை அடுத்து, அவரை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். சொற்பொழிவு நிகழ்ச்சியானது மத்திய தெஹ்ரானில் உள்ள கொமேனி கிராண்ட் மொசாலா மசூதியில் நடைபெற்றது. சொற்பொழிவைத் தொடர்ந்து உயிரிழந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசும் போது, "சில இரவுகளுக்கு முன் நமது படைகள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் சட்டப்பூர்வமான, முறையான ஒன்று ஆகும். இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் அவர்கள் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுக்கு எதிராக செய்த குற்றங்களுக்கான குறைந்த பட்ச தண்டனை தான்."

"பிரிவினை மற்றும் தேசத்துரோகத்தை விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதே நமது எதிரியின் கொள்கைகள் ஆகும். அவர்கள் பாலஸ்தீனியர்கள், லெபனானியர்கள், எகிப்தியர்கள், ஈராக்கியர்களுக்கும் எதிரிகள். அவர்கள் தான் ஏமன் மற்றும் சிரிய மக்களுக்கும் எதிரிகள். நம் எதிரி ஒன்று தான்."

"சையத் ஹசன் நஸ்ரல்லா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது ஆன்மாவும், அவரது பாதை என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும். அவர் சியோனிச எதிரிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். அவரது தியாகம் இந்த செல்வாக்கை மேலும் அதிகரிக்கும். நஸ்ரல்லாவின் இழப்பு வீண் போகவில்லை. நமது அசைக்க முடியாத நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு எதிரிக்கு எதிராக நிற்க வேண்டும்."

"இரத்தம் சிந்தும் லெபனான் மக்களுக்கு உதவுவதும், லெபனானின் ஜிஹாத் மற்றும் அல்-அக்ஸா மசூதிக்கான போரை ஆதரிப்பது அனைத்து முஸ்லிம்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து தங்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு கண்டித்து போராட்டம் நடத்தவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ எந்த சர்வதேச சட்டத்திற்கும் உரிமை இல்லை."

"சியோனிஸ்டுகள் மற்றும் அமெரிக்கர்கள் கனவு காண்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க ஆதரவு இருப்பது மட்டுமே சியோனிசம் தலைதூக்க ஒற்றை காரணம். சியோனிச ஆக்கிரமிப்பு வேரோடு பிடுங்கப்படும். அதற்கு வேர்கள் இள்லை, அது போலியான ஒன்று," என்று தெரிவித்தார்.
 

Leave a comment

Comment