TamilsGuide

பிரபல யாழ்.நாதஸ்வர வித்துவான் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நாதஸ்வர வித்துவான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இரவு முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நாதஸ்வர கச்சேரி நிகழ்வை முடித்துக்கொண்டு, மறுநாள் 15ஆம் திகதி காலை வேளை மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
 

Leave a comment

Comment